இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு, பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது, நாஜிக்களின் ஆதிக்கத்தில் பிரான்ஸ் அடைந்த துயரங்களைக் குறித்த ஆராய்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பேட்ரிக் மோடியானோ. அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து நோபல் தேர்வுக் குழு கூறியதாவது:
அன்னிய ஆக்கிரமிப்பின் பிடியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை பேட்ரிக் மோடியானோவின் எழுத்துகள் அச்சு அசலாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அதன்மூலம், யாரும் புரிந்து கொள்ள முடியாத உலகுக்கு மனித உணர்வுகளை இட்டுச் செல்லும் அவரது கலை நயத்துக்காக, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று தேர்வுக் குழு தெரிவித்தது.
மோடியானோவின் "தொலைந்த மனிதன் (மிஸ்ஸிங் பர்ஸன்)' நாவல், 1978-ஆம் ஆண்டு கெüரவம் மிக்க "பிரிக்ஸ் கான்கோர்ட்' விருதினை வென்றது. 1968-இல் வெளியான இவரது "லா பேலஸ் டீ லெடோல்லே' என்ற பிரெஞ்சு நாவல், யூதப் படுகொலைகள் குறித்த மிக முக்கியமான பதிவுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.மோடியானாவின் "ரிங் ஆஃப் ரோட்ஸ்', "வில்லா டிரைஸ்ட்', "தி டிரேஸ் ஆஃப் மாலிஸ்', "ஹனிமூன்' உள்ளிட்ட பல நாவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
பேட்ரிக் மோடியானோ (69)
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின்பு, 1945-ஆம் ஆண்டு பாரிஸ் புறநகர் ஒன்றில் பேட்ரிக் மோடியானோ பிறந்தார்.
இவரது தந்தை, யூத மதத்தைச் சேர்ந்த இத்தாலியர். இவரது தாய் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நடிகை.
யூதர்களின் துயரங்கள், நாஜிக்களின் கொடுமை, சமூக அடையாள இழப்பு ஆகியவையே பெரும்பாலும் இவரது நாவல்களின் கருப்பொருள்களாக அமைந்துள்ளன.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment